மகளே மகளே ஓடிவா

நாலு ஈக்கிலுக்கு
தோல்போர்த்திய உடல் அவள்
சிரித்து கை நீட்டுகையில்
வானமாகிறாள்
 
தூக்கு தூக்கு
என நிலையாய் நிற்கிறாள்
 
பிடிவாதம் பிடிக்கையில்
முறுக்கு கம்பியென
கனக்கிறாள்
 
கோபம் கொண்டு
அடிக்கிறாள்
 
கண் மூக்கு பாராது
பட்ட அடி வலிக்கையில்
தீச்சுட்ட இலையென
சுருள்கிறாள்
 
கட்டிப்பிடிக்கிறாள்
முகம் கேட்டு
கைகளால் தடவி
வடுவை மயக்கி
முத்தம் புதைக்கிறாள்
 
சரியாகிவிடும்
நெற்றியிலும்
ஒரு
முத்தம்
 
தேன் குருத்தின்
உதட்டு ஈரம்
உயிர்சக்தி
 
வர்மம் தூண்டும்
வாமனி
 
வாழ்கிறேன் நான்
வாழவே
வந்துபிறந்த இசக்கியவள்
 
கண்டித்து வளர்க்க வேண்டும்
 
……………………
இரா. அரிகரசுதன், 07.07.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

© 2025 Anali. All rights reserved.
Scroll to Top